சனி, 15 மார்ச், 2014

கச்சதீவுக்கான பயண ஒழுங்கு இன்று முதல்

 கச்சதீவு புனித அந்தோனியார்  ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்று தொடக்கம் மேற் கொள்ளப்பட்டுள்ளன.   கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் அந்ததந்தப் பகுதிகளில் இருந்து ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.   இலங்கையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக குறி காட்டுவானில் விசேட படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து காலை 6 மணி தொடக்கம்  ஆரம்பமாகும் படகுச் சேவைகள், 2 மணித் தியாலத்துக்கு ஒருதடவை என்ற அடிப்படையில் தொடர்ந்து  இடம்பெறும்.   திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலில் சகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 14 மார்ச், 2014

நாளை ஆரம்பம்கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா


இந்திய- இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை கச்சதீவு திருவிழாவிற்காக தமிழகத்திலிருந்து பங்கு கொள்ள 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இமேஸ்வரம் தீவிலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்ப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது.

1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சதீவு விழா நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இலங்கையில் உள்நாட்டு போர் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2002 இல் மீண்டும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கச்சதீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 95 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் 2,972 ஆண்கள், 347 பெண்கள், 141 குழந்தைகள் என மொத்தம் 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் படகு உரிமையாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சதீவு திருவிழாவிற்கு பயணிக்க முடியாது.

வியாழன், 13 மார்ச், 2014

உற்சவத்தில் 3500 இந்தியர்கள் கலந்து கொள்கின்றனர்:

 கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த திருவிழாவில் 3500 இந்திய கத்தோலிக்கர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடந்த உற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள 3500 இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த விண்ணப்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களுடன் இலங்கையை சேர்ந்த கத்தோலிக்க பக்தர்களும் பெருமளவில் தேவாலய உற்சவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கச்சதீவில் நடைபெறும் வருடந்த உற்சவத்திற்கு தேவையான சகல வசதிகளையும் கடற்படையினர் வழங்க உள்ளனர்.